14

Jun

2025

ஆடை அழுக்காகிறது…

வாழ்க்கை ஒரு தேடல். எந்த இடத்திலும் தேங்கி நிற்கக் கூடாது என்பதுதான் எனது நம்பிக்கை. எனக்கொரு வாழ்க்கை எனக்கொரு ராஜாங்கம், வீடு, குடும்பம், ஊர் என்று என்னை ஒரு இடத்திலேயே இருத்திக் கொள்ள ஆசைப்படமாட்டேன். ஆனால் நான் பார்க்கின்ற உலகம் வசதி வாய்ப்புகளைக் கண்டவுடன் அல்லது வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்வதற்காக ஒரே இடத்தில், ஒரே பணியில், ஒரே ஊரில் தேங்கி விடுவார்கள். தேங்கி இருப்பது உபரி நீர் ஆகிவிடும். வளர்ச்சி இருக்காது யாருக்கும் பயனாகவும் இருக்காது.

ஒரே இடத்தில் தேங்கிக் கிடந்தால் எந்த வளர்ச்சியும் அடையாமல், யாருக்கும் பலனும் இல்லாமல் நாம் சாக்கடை ஆகிவிடுவோமல்லவா! எந்த பலனும் இருக்காது என்பது என் எண்ணம். என்னைப் பொருத்தமட்டில் மனிதர்களைச் சந்தித்து அன்பைக் கொடுப்பதும் பெறுவதுதான் எனது மானிடப் பிறப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஆகவே மானிடர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கிராமப்புறங்களைத் தேடி எனது பயணம் இருக்கும். சிலநேரங்களில் பள்ளி விழாக்கள், கோவில் விழாக்களில் உரையாற்றவும் சிலரோடு உறவாடவும் பெரிதும் துணைநிற்பது இந்தப் பயணம் தான்.

ஒருமுறை ஒரு சமய நிகழ்ச்சிகளில் உரையாற்றுவதற்காக ஒரு கிராமத்து கோவில் விழாவுக்குச் சென்றிருந்தேன். சில வேலைகளை முடித்துவிட்டு அந்தக் கிராமத்திற்குச் சென்றதால் குறிக்கப்பட்ட நேரத்திற்குச் செல்ல முடியாததால் சற்று தாமதமாகச் சென்றேன். அதே விழாவில் பங்கெடுக்க பல அறிஞர்கள், ஆன்மீகவாதிகள், கல்வி வல்லுநர்கள் வந்து சமய வழியில் மனித நேர்மை என்ற உட்கருத்தோடு உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே நானும் உரையாற்ற வேண்டியது இருக்கிறது என்ற முனைப்பில் எனது வெள்ளைநிற துறவற ஆடை அணிந்து அக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன். நான் சென்ற போது கூட்டம் அதிகரித்திருந்தது. அப்போது தலைவர்களில் ஒருவர் உறையாற்றிக் கொண்டிருந்தார். நானும் சென்றபோது என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர் என் அருகில் வந்து என்னை மேடையை நோக்கி அழைத்துச் சென்றார். நான் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு நாற்காலி இருந்தது. இந்த நேரத்தில் கூட்டத்திற்குள் சென்று ஒரு சலசலப்பை ஏற்படுத்த வேண்டாம் என நினைத்து அருகில் அந்த இருக்கையில் போய் இருந்தேன். உடனே எனக்குப் பின் என்னோடு வந்தவர்கள் படபடத்துப் போனார்கள். காரணம் அந்த நாற்காலி தூசி படிந்திருந்தது.

உடனே அந்த இருக்கையை விட்டு எழுந்திருக்கச் சொன்னார்கள் பலரும் தயக்கத்துடன் பக்கத்தில் வந்தார்கள். காரணம் எனது வெள்ளை உடையில் அந்த இருக்கையில் இருந்த தூசிகளும் அழுக்குகளும் அதில் படிந்ததால் எனது ஆடை அழுக்காகி என்னை அசிங்கப்படுத்திவிடும் என்பதால் அதனைத் தடுக்க நினைத்தார்கள்.

ஆனால் என்னுடைய கவனக்குறைவால் அந்த ஆடை சற்று அழுக்காகி விட்டது. இருப்பினும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்தக் கூட்டத்தில் பேச ஆரம்பித்தேன். அந்த ஆடை அழுக்குப்பட்டிருந்ததால் அந்தக் கூட்டத்தை கடந்து வரும்போது எல்லோரும் என்னுடைய கரைபடிந்த ஆடையை கண்டு விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.

சிலர் துடைக்க நினைத்தார்கள். சிலர் அதனைத் துடைப்பதற்கு துண்டு கொடுத்தார்கள். இவற்றில் எதையும் நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதே அழுக்கு ஆடையோடு என் உரையை ஆரம்பித்தேன்.

உங்களுக்கு ஒரு செய்தி சொல்வதற்காக இங்கு வந்தேன். இப்போது ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அது என் ஆடை அழுக்காகிவிட்டது. காரணம் அழுக்கான இருக்கையில் நான் சென்று அமர்ந்ததால் அதனைத் தடுக்க பலர் முற்பட்டும் நான் கவனிக்காததால் எனது ஆடை அழுக்காகிவிட்டது.

இப்போது எனது கேள்வி எனது ஆடையை உடனே நான் மாற்றிக் கொள்ளலாம் அல்லது அதனையே சரிசெய்து கொள்ளலாம். ஆனால் மனது அழுக்கானால் என்ன செய்வது? ஆடை அழுக்காகி விடக்கூடாது என்று துடிக்கின்ற கூட்டம் ஒருவன் மனது அழுக்காகும்போது ஏன் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது? நான் அமர்ந்தாலும் யார் அமர்ந்தாலும் ஆடை அழுக்காகத்தானே செய்யும்! அப்படியென்றால் அந்த இருக்கையை ஏன் அங்கு அனுமதித்தீர்கள்?

இப்படிப் பல கேள்விகளை உங்களுக்குள்ளும் சமுதாயத்திலும் கேள்வி கேளுங்கள்! கேள்விக்கு நீங்களே பதில் தேடுங்கள் இப்படித் தேட ஆரம்பித்தால் இந்த சமுதாயத்தில் பல அழுக்குகள் எப்போதோ அப்புறப்படுத்தப்பட்டிருக்கும். இயேசு ஒருமுறை கூறுவார். பாத்திரத்தின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்து பயன் என்ன? உட்புறம் தானே நம் உடலுக்குள் செல்வதோடு ஒட்டியிருக்கும்! வெளிப்புறம் என்பது அழகிற்கு மட்டுமே! உட்புறம் மட்டுமே வாழ்க்கையோடு தொடர்பு உள்ளது. ஆகவே வெளிப்புறத்தைச் சுத்தப்படுத்தினாலும் நீங்கள் அழுக்குத்தான். உள்;புறம் சுத்தமானால்தான் உண்மையான சுத்தமாகும். வெளிப்புற அழுக்கு யாருக்கும் வெளிப்படையாகத் தெரியும் உடனே எச்சரிக்கிறார்கள். அது நமது சுயமரியாதைக்கு மட்டுமே இழுக்கு ஏற்படுமே தவிர சமுதாயத்தில் அது பெரிய இழப்பை யாருக்கும் ஏற்படுத்தாது.

ஆனால் மனிதனுக்குள் இந்தச் சமுதாயத்தைச் சாக்கடையாக்கும் போட்டி, பொறாமை, வஞ்சனை, காமம், ஆசை பழிவாங்குதல், ஒரங்கட்டுதல், இழிவுபடுத்துதல் என்று நம்மை சாகடிக்கும் அத்தனை அழிவுகளையும் செய்யும். ஆனால் உடை அழுக்கு வெளிப்படையாகத் தெரிவதால் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் மன அழுக்கு மறைவாக இருப்பதால் அது ஒருவனைத் தீயவனாகக் காட்டுவதால் அவ்வளவு எளிதாக ஏற்றக் கொள்ளப்படுவதில்லை.

அவ்வாறு ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் மீது நாம் அவதூறு ஏற்படுத்தியதாக நம்மீது பாய்வார்கள் நம்மைப் பழிவாங்கத் துடிப்பார்கள். நம்மீது இல்லாதது பொல்லாதது பேசுவார்கள், எழுதுவார்கள். இருப்பினும் சுட்டிக்காட்டுவதுதான் இந்தப் பூமிக்குத் தேவையான பணி. இந்தப் பணிதான் ஆன்மீகப் பணி, அறப்பணி, இந்தப் பணியைச் செய்யத்தான் பலர் தன் உயிரையும் தந்திருக்கிறார்கள்.

அந்த அழுக்கு இருக்கை அங்கு இருந்ததால்தானே எனது உடைகள் அழுக்கானது. அதுபோல ஆங்காங்கு தெரிகின்ற மதுபானக் கடைகள், மயக்கும் கன்னிகள், போதையாட்டங்கள், கேளிக்கை விடுதிகளை நீங்களும் போராடி அப்புறப்படுத்தாலாமே!

நீங்கள் உண்மையைக் கூறினால் பகையாகலாம், நட்புகள் பிரியலாம். குற்றவாளியாகலாம், உங்களைக் கொலை கூடச் செய்யலாம். இல்லாதது பொல்லாதது கூறி, எழுதி இழிவாக நடத்தலாம் இருப்பினும் நக்கீரன் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கர்சனையிட்டது போல நீங்களும் துணிவுடன் எடுத்துச் சொல்லுங்கள். என் தலையே போனாலும் நீ உன் சகோதரன் மனைவியை வைத்திருப்பது குற்றமே எனக் கூறி அதற்காக தலையைப் பறிகொடுத்த தீர்க்கத்தரிசி யோவானைப் போல வாழ்ந்து காட்டுங்கள்.

புற அழுக்கை ஒரு சலவையால் நீக்கலாம். ஆனால் அக அழுக்கை நீங்கள் மனதுவைத்தால் மட்டுமே நீக்க முடியும். யாராவது சுட்டிக் காட்டும்போது தட்டிக் கழிக்காதீர்கள். புற அழுக்கு என்பது கவனக்குறைவால் வருவது. ஆனால் மனஅழுக்கு பாவத்தின் பிறப்பிடம்… துணிந்து அதனை ஏற்று நீங்களே திருத்திக் கொள்ளுங்கள், மறைக்காதீர்கள், மறுக்காதீர்கள், அவமானக் குறைவாக எண்ணாதீர்கள். அதனால் இழப்பு ஒன்றுமில்லை. மன அழுக்கை மறைத்து மாறுவேடம் போட்டு மகானாய் நடிப்பதைவிட மரணத்தைத் தழுவிவிடலாம். மன அழுக்கை மறைக்கலாம், மறுக்கலாம். ஆனால் அது உங்கள் மானத்தை வாங்கிவிடும் உங்களை தலைகவிழச் செய்துவிடும். மானிடச் சமுதாயத்தை விட்டு அப்புறப்படுத்திவிடும். அதற்குள் நீங்களே அதனை சுத்தம் செய்துவிடுங்கள். அருகிலுள்ளவர் அசுத்தங்களையும் அகற்ற உதவி செய்யுங்கள் அவர்களையும் பாதுகாத்து உங்களையும் சுத்தப்படுத்தி நவீன தீர்க்க தரிசிகளாய் வாழுங்கள் இந்த பூமியை சுத்தப்படுத்திய பெரும் புண்ணியம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வந்து சேரும். நம்புங்கள் நல்லது செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

“உண்மைக்காக…
உயிரைக் கொடுக்கலாம்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES