02
Jun
2025
மே மாதம் வந்தவுடன் மகனைக் கூட்டிக் கொண்டு பிரபலமான பள்ளி எது? எங்கு அதிகக் கட்டணம் வாங்குவார்கள்? அதில் எப்படி நம் பிள்ளையைச் சேர்ப்பது? அதற்கு யாரிடம் சிபாரிசிற்குச் செல்வது என்று பதட்டத்தோடு அலையும் பாவப்பட்ட பரிதாபத்திற்குரிய அப்பாவல்ல நான். சுயமாய் சிந்திக்க சொந்தக்காலில் நிற்க என் மகனுக்குச் சொல்லிக் கொடுக்கும் மாற்றுச் சிந்தனை உள்ளவன் நான்.
எந்தப் பள்ளிக்கும் நான் போகப் போவதில்லை. இப்போது உள்ள கல்வி முறையில் என் பையனைத் தேடி அவர்களே வீடுதேடி வருவார்கள். சிலர் தங்களது வேலையைத் தக்க வைத்துக் கொள்ள சலுகைகளைத் தருகிறேன் என்பார்கள். சிலர் தங்கள் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக பல வசதிகளைச் செய்வேன் என்பார்கள். சிலர் தாங்கள் எஜமானுக்குப் பணம் சேர்க்க அடிமைகளாய் வேலை செய்யும் ஆசிரியர்கள் என்ற பெயரில் உலவும் உருவப் பொம்மைகள் அத்தனை வித்தைகளையும் அவிழ்த்து விடுவார்கள். இவர்கள் எல்லாம் எப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள் இவர்களிடமிருந்து எப்படி என் குழந்தையைக் காப்பாற்றலாம் என யோசிப்பேன். அவர்கள் நிலை உனக்கு வராதவாறு பார்த்துக் கொள் என எச்சரிப்பேன்.
ஆகாயத்தில் கோட்டை கட்டும் விளம்பரங்கள் ஆபாசத்தை விடக் கொடியது அதற்கு மயங்காதே! என்பதனைச் சொல்லிக் கொடுப்பேன். ஆடம்பர உடைகள் உடுத்துவதை சீருடை என்று சொல்வதை அடியோடு வெறுக்கக் கற்றுக் கொடுப்பேன். வாகன வசதி உண்டு வீட்டு வாசலில் வந்து நிற்கும் என்று சொல்லி என் குழந்தையை ஊனமாக்குவதை உதறித் தள்ளி விடுவேன். ஆயா வைத்துப் பையனை பார்க்கும் பள்ளிகளில் சேர்ப்பதைவிட அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடலாமே என்ற சிந்தையுள்ளவன் நான்.
என குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவனாய் எழுந்திருக்க, ஒட, அவன் தேவையை அவனே செய்ய முயற்சி எடுக்கச் சொல்லுங்கள். பகிர்ந்து உண்ணக் கற்றுக் கொடுங்கள். பிறரோடு பழகவிட்டு அதில் ஏற்படும் முரணை அவனது சம்மதத்தோடு களைய முற்படுங்கள். பிறரோடு பழகக் கற்றுக் கொடுப்பதும் நட்பு முக்கியம் என்பதனை நன்கு கண்டு பிடிக்க அவனது கைகோர்த்து நடங்கள்.
எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதைவிட எந்தப் பள்ளிpயில் சேர்க்கக் கூடாது என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். விவசாயி, விவசாயம் பற்றி எதுவுமே கற்றுக் கொடுக்காமல், காய்கறிகளை மட்டும் வாங்கி கழுத்தில் மாட்டிக் கொண்டு கண்காட்சித் திருவிழா என்று சொல்லும் கயவர்கள் பள்ளியில் கடவுளே வந்து சொன்னாலும் சேர்க்க மாட்டேன்.
பிள்ளைகள் நலன் பேணாது இன்றையப் பங்குச் சந்தை உலகில் பள்ளிக்கூடம் நடத்துவதான் பெரிய வியாபாரம் என நினைக்கின்ற இந்தப் பாழாய்ப்போன மனிதர்களிடம் இருந்து தன் கற்பை இழந்து நிற்கும் கல்வியை எந்தக் கடவுள்தான் காப்பாற்றப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
என்னைவிடப் பெரிதாக என் குழந்தைக்கு யாரும் கற்றுக் கொடுக்கப் போவதில்லை என்பதனை உணர்ந்து இருக்கிறேன். எனக்குத் தெரியாத சிலவற்றைத் தெரிந்து கொள்ளவே அவனும் நானும் ஆசிரியர்களை நாடுகிறோம் என அவனை அறிய வைப்பேன். என்னோடு இருப்பதும் குடும்பத்தோடு மகிழ்வதும்தான் உயர்ந்த பள்ளிக்கூடம் என்பதனை உணர வைப்பேன்.
புத்தகம் புத்தனைத் தராது என்பதனைப் புரிய வைப்பேன். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள அவர்களோடு இருந்து படிக்க, அவர்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி வைப்பேன். சத்துணவு சாப்பிடும்போது யாவரோடும் சமமாக அமர்வதை ரசிப்பேன். சுற்றுச்சுவர் இல்லாத பாதுகாப்பு அதிகம் இல்லாத பள்ளியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதனை பழகிக் கொடுக்கும் பள்ளியில் படிக்க வைப்பேன்.
பெண் குழந்தைகளோடு பேசக் கூடாது என்று சின்ன வயதிலேயே பிரித்து வைக்கும் பிழையைச் செய்யும் ஆசிரியர்கள் வகுப்புக்குச் செல்லக் கூடாது என்று சொல்லி வைப்பேன். எல்லோரிடமும் பழக விடுங்கள். ஆனால் எப்படிப் பழக வேண்டும் எனச் சொல்லிக் கொடுங்கள். சாதி, மதம், இனம், ஏற்றத்தாழ்வு எல்லாம் இந்தச் சமுதாயத்தில் உண்டு அதிலிருந்து எப்படி விலகி நிற்கப் போகிறாய்? எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் முதல் இடம் வேண்டும் என அவனை மூலச்சலவை செய்யாதீர்கள். மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக அவன் விருப்பங்களை அழிக்காதீர்கள். தனிப்படிப்பு என்று அவனைத் தனிமைப்படுத்தி விடாதீர்கள்.
என் மகனிடம் எப்போதும் நல்லது செய்யும்போது கனிவும், தவறு செய்யும்பொது கண்டிப்பும் காட்டி நிற்பேன். அவனது உலகிற்குள் ஒருபோதும் நுழையவும் மாட்டேன். அவனைக் கண்டுக்காமல் விலகவும் மாட்டேன் நான் கறார் பேர்வழிதான். அவனைத் தட்டிக்கொடுக்கிறேன் என்ற பெயரில் அடுத்த தலைமுறையை நான் எப்போதும் அழிக்க மாட்டேன். சிலநேரங்களில் அவனுக்குக் குரு நானே!
உன் பள்ளியை நீயே தேர்ந்தெடு! உன் பாடத்தை நீயே முடிவெடு எல்லா ஆசிரியர்களுக்குள்ளும் உன் பெற்றோரைத்தேடு யாருடைய பாராட்டுக்கும் காத்திருக்க வேண்டாம். யாருடைய பாசத்தையும் விட்டு விலகி நிற்காதே! உன்னுடைய அடிப்படை வசதியை அப்பாவின் நிழலில் பெற்றுக்கொள். ஆடம்பரத்தை விரும்பும்போது வருமானத்தைப் பெருக்கிக் கொள்.
வெற்றியை உனது முகமாகக் காட்ட ஆசைப்படாதே! தோல்வியை அவமானமாக்கக் கருதாதே! இதனை உணராமல் மாணவர்களை உடைக்கின்ற ஆசிரியர்கள் இங்கு அதிகம். ஆசிரியர்கள் திட்டும்போது ஆதங்கப்படாதே! அழுதும் விடாதே! ஒருவகையில் அவர்கள் உன்னை உயர்த்தப் பார்க்கிறார்கள் ஆனால் சொல்லுகிற விதம் தப்பாக இருக்கலாம்.
என் மகனே உனது இறகுகளை இந்தக் கல்விமுறை கத்தரித்து விடக் கூடாது. ஒரு பணக்கார வீட்டு வளர்ப்புப் பிராணியாக அலங்கரிக்கப்பட்டு ஒரு எஜமானுக்கு அடிமையாக வாழ்வதுபோல ஒரு நிறுவனத்தில் அடிமையாகிவிடாதே! உடலில் மினுக்கான உடையோடு ஒவ்வொரு நொடியும் பயந்த வாழ்க்கைதான் என்றால் நீ எனக்கு மகனாய் இருக்க முடியாது. வண்ணத்துப் பூச்சியாய் உன் எண்ணத்தைத் தீட்டிக் கொள். உனக்கான வானம் இது பறந்து வா!
உன் பயணம் உறவுகளைத் தேடிய பயணம். யாரையும் இழந்து விடாதே! உன் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு எவரையும் மாற்ற எண்ணாதே! நண்பர்கள் வட்டம் வேண்டாம் அது நல்லதாகத் தெரியும் ஆனால் அது உன்னை குறுக்கிவிடும். பெண் குழந்தைகளோடு பேசுவதைப் பெருமையாகக் கொள். அவர்கள் பெருமைப்படும்படி உன் உறவுகளை அமைத்துக் கொள். பிறருக்குப் பிடிக்கும் படி வாழ்வதைவிட பிறர் உன்னைப் படிக்கும் படி நல்ல எண்ணங்களை வளர்த்தும் கொள்.
மகனே உன்னை நீயே செதுக்கிக் கொள் பிறரைச் செதுக்க விடாதே! பிறரிடமிருந்து உளியை(அறிவுரை) வாங்கிக்கொள் வலிகள் தான் வழிகள். அவமானங்கள் தான் உன் அடையாளத்தை அடையப் பாதை காட்டும். யாரையும் ஏளனமாக எண்ணாதே. என் மகன் எல்லோருக்கும் மகனாக வாழந்து விட்டால் இவனே என் மகன் நான் இறந்த பின்னும் இதனைச் சொல்லி மகிழ்வேன். துணிந்து சொல் எந்தத் தொலைதூரத்தையும் வெல். நான் உடனிருக்கிறேன் அப்பாவாகிய நான்.
“எனக்கு
மண்ணுலகச்
சொர்க்கம்
என் மகன்”