07
Jun
2025
மனுநீதிச் சோழனின் கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தன் மகன் வீதி உலா வரும்போது தனது தேர்காலில் ஒரு கன்றுக் குட்டியை அடித்துக் கொன்று விடுகிறான். இதனால் மன்னன் மனுநீதிச்சோழன் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்று விடுகிறான். இது மனுநீதிச் சோழனின் வரலாறு.
இவன் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோமா? நாம் வாழ்ந்த பூமியில் இவன் வாழ்ந்தானா? என்று கேள்விகள் கேட்டுப் பார்த்தால் இதனை ஏற்றுக் கொள்ள முடிகிறதா? இப்போது ஆள்கிறவர்கள் இப்படி ஆள முடியுமா? இல்லை ஆளத்தான் விடுவார்களா? இப்போது ஆள்கின்ற அரசியல்வாதிகளோ அதிகாரிகளின், குழந்தைகளையோ தவறுகள் செய்ததற்காக அவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றால் இங்கு எவருக்கும் பிள்ளைகள் இருக்காதே! இப்போது நடைமுறையில் அப்படித்தானே இருக்கிறது.
பல போராட்டத்திற்குப்பின் நக்கீரனால் நெற்றிக் கண் திறந்து குற்றம் குற்றமே! என நிருபிக்கப்பட்ட கோவை நிகழ்ச்சி நமக்கு கண்முன் வருகிறதுதானே? நாங்கள் ஆட்சியாளர்களின் அல்லக்கைகள் என்கிற அயோக்கியத்தனத்தானே! இதற்குக் காரணம். எங்கெல்லாம் சட்டம் ஒழுங்கு மீறப் படுகிறதோ! எங்கெல்லாம் அயோக்கியத்தனங்கள் அரங்கேற்றப் படுகிறதோ! அங்கெல்லாம் காவல்துறைகள் நடவடிக்கை எடுக்க வரும்போது அவர்களிடம் சமூக விரோதிகள் சொல்லும் பதில் என்ன? நான் யார் தெரியுமா? நான் அவருக்குச் சொந்தம் இவருக்கு நெருக்கம் என்று அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களின் பெயர்களைச் சொல்லித்தானே மிரட்டுகிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததுதானே!
ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் அத்துமிறல்கள் நடக்கின்ற இடங்களில் எங்கள் பெயரைச் சொன்னால் எவனாயிருந்தாலும் சரி, எனது மகனாயிருந்தாலும் சரி தவறு செய்தால் உடனே சுட்டுத் தள்ளுங்கள் என்று சொல்லத் தைரியம் இருக்கிறதா? அந்த மானமுள்ள மனுநீதிச்சோழனதான் இந்த மண்ணை ஆள்கிறார்களா? இல்லையே! என் மகனை எப்படியாவது விட்டு விடுங்கள் என்று மன்றாடுகின்ற மானங்கெட்ட மாண்புமிகுக்கள்தான்; இந்த மண்ணில் உலவுகின்றீர்களா?
இங்கு சட்ட ஒழுங்கு எப்போது கெடும்? அரசியல்வாதிகள் நிகழ்ச்சிகளுக்கு ஊருக்குள் வந்தால்! அயோக்கியத்தனமும் அத்துமீறல்கள் பொய்யான வாக்குறுதியும் ஏமாற்று வேலைகளும் எப்போது நடைபெறும்? தேர்தல் வரும்போதுதானே! சண்டை சச்சரவுகள் எப்போது வரும்? கட்சிகளைப் பற்றிப் பேசும்போதுதானே. ஒருவருடைய முகத்தை உலகம் அறிந்துகொள்ள ஒவ்வொரு முட்டாள்களும் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்வதுதான் மாநாடா? கட்டாய வசூலிப்பு, போட்டியென்று வந்தால், அடுத்தவர்களை மிரட்டுவது, அடிதடி, கொலை, வெற்றிக்குக் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பது, இதுதான் தேர்தலா? இதுதான் அரசியல் என்றால்? இதிலிருந்து வருபவன்தான் நமக்குத் தலைவன் என்றால் அவர்கள் ஆண்டாலென்ன? மாண்டாலென்ன! இந்த மானங்கெட்ட அரசியல் நமக்கெதற்கு?
அதிகாரிகள், அரசியல்வாதிகளின் குழந்தைகள்தான் அப்படி இருக்கிறார்கள் மற்றக் குழந்தைகள் எல்லாம் மகான்கள் என்று மார்தட்டிக் கொள்ளாதீர்கள். மண்ணைக் கவ்வி விடுவீர்கள். பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருப்பதால் சொல்கிறேன். பெரும்பான்மையான குழந்தைகள் இங்கு பெற்றோருக்குக் கீழ்படிவதில்லை என்ன உங்கள் குழந்தை இப்படி இருக்கிறான் என்று கேட்டால்? உடனே பெற்றோரிடமிருந்து வருகின்ற பதில் அவன் எங்கே எங்கள் பேச்சைக் கேட்கிறான்? என்று சலிப்போடு பதில் சொல்கிறார்கள்.
இங்கு பெற்றோர்களுக்குச் சமூகக் கடமை என்று ஒன்றிருக்கிறது என்பதே பலருக்குத் தெரியவில்லை. காரணம் அனைவரும் படித்து விட்டதால் பள்ளிகளும் புத்தகங்களும் பலரை முட்டாளாக்கி விட்டதோ எனப் பயப்படுகிறேன். எதிர்காலம் இப்படி அமைய பிள்ளைகளை இப்படி வளருங்கள் என்று பெற்றோர்களை அறிவுறுத்தும்போது அவர்கள் ஒரு வழியாக அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகள் ஒரே அடியாக அதனை மறுக்கிறார்கள் இறுதியில் பிள்ளைகள் செயிக்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தைகள் வாழ்க்கையில் தோற்கிறார்கள். இது தெரியாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமது கண்முன்னே அவர்களுக்கு கல்லறை கட்டிக் கொள்வதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
பள்ளிப் பருவம் கற்றுக் கொடுக்கும் பாடம் ஒன்றுதான். கஷ்டப்பட்டுப் படித்து எளிதாக எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது இல்லையென்றால் எளிதாகப் படித்து எதிர்காலத்தில் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுவது. இதில் எப்போதுமே இப்போது உள்ள மாணவர்கள் இரண்டாவது நிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெற்றோர்களும் அவனுக்கு அது கஷ்டமாக இருக்குமாம் விட்டுவிடுங்கள் என்றுதான் கூறுகிறார்கள். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் இறகுகளைச் சுமைகள் என்று கருதுகிறது. அதற்காக அதனை வெட்டிவிடுவீர்களா? அதுதான் பறப்பதற்குப் பயன்படும் என்று நீங்கள் சொல்லிக் கொடுங்கள் அதுதான் பெற்றோர்களாகிய உங்களது கடமை.
இங்கு பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர்களுடன் இருக்க விரும்புவதில்லை. பெற்றோர்களுக்கோ பிள்ளைகளைத் தங்களோடு வைத்துக்கொள்ள எண்ணமில்லை. இப்படி வாழ்கின்ற குடும்பத்தில் இருந்து வருகிறவர்களிடம் எப்படி நீங்கள் அன்பை எதிர்பார்க்க முடியும்? பிள்ளைகள் நண்பர்களோடும், விளையாட்டுப் பொருட்களோடும், அலைபேசியோடும் வாழத்துடிக்க, பெற்றோர்களோ பிள்ளைகளைத் தனிப்படிப்புக்கு அனுப்பி படிக்க வைப்பது போல் நடிக்க இந்த நாடக மேடையில் அன்புக்கு என்ன வேலை? ஏனென்றால் அன்புக்கு நடிக்கத் தெரியாது.
பெற்றோர்களே பிள்ளைகள் படிக்கிறார்கள் உண்மைதான். அதற்காக அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்! புத்தகப் படிப்பு அனைத்தையும்; தராது. நீங்கள்தான் அவனுக்குச் சிறந்த வழிகாட்டி நீங்கள் அவனுக்கு அனைத்தையும் புரிய வைக்க வேண்டும். நீங்கள் சொல்வதை அவன் கேட்டால் அவனது எதிர்காலம் சிறப்பாகும் அவன் சொல்வதை நீங்கள் கேட்டால் அவனது எதிர்காலம் சூன்யமாகும்.
உங்கள் குழந்தையின் அறிவு, வயது, பக்குவம், இவற்றைக் கொண்டு பேசும்போது அதனை நீங்கள் கேட்டு நடப்பதற்கு நீங்கள் முதிர்ந்த முட்டாளா? வடிகட்டிய முட்டாளா? யோசித்துப் பாருங்கள். உங்களது பாசம், குழந்தையின் அழுகை, பிடிவாதம், பயம் இவற்றினால் உங்கள் கண்கள் குருடனால் உங்கள் குழந்தையின் எதிர்காலம் இருளாகிவிடும்! அது உங்களுக்கு விளங்கவில்லையா?
மழலைப் பேச்சைக் கேளுங்கள், இரசிக்கலாம், உண்மையை மறுக்கும் பேச்சைக் கேட்காதீர்கள் தவறு செய்தால் கண்டியுங்கள், கேட்க மறுத்தால் தண்டியுங்கள் உண்மையை விளங்க வைத்து தவறுகளில் இருந்து அவனை தள்ளி நிற்கக் கற்றுக் கொடுங்கள்;. உரிய நேரத்தில் உள்ளது விளங்காமல் அவன் தவறு செய்தபின் மனுநீதிச்சோழன் போல மகனைக் கொன்று என்ன பயன்?
இங்கு எல்லோரும் மனுநீதிச்சோழன்கள்தான். நவீன மனுநீதிச்சோழன்கள் எல்லோருக்குமே பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கத் தெரியாமல் அடுத்தவர்கள் கன்றுக்குட்டிகளை எல்லாம் அழித்த பிறகு நீதிமன்றத்தால் சட்டத்தின் மூலம் நசுக்கப்படுகிறார்கள். கண்ணீரோடு அந்தக் காட்சியைக் காண்பது எவ்வளவு கொடுமையானது பெற்றோருக்குத் தெரிந்ததுதானே! கடவுள் நமக்குக் கொடுத்த குழந்தையை நன்கு கவனிக்கத் தெரியாமல், தவறு செய்யும் போது கண்டிக்கத் தெரியாமல் பிள்ளைகள் விருப்பப்படி நடக்கிறோம் என நினைத்து அவன் வாழ்வையே பாழாக்கும் அப்பாக்கள் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? பிள்ளைகள் தாயின் அருகே இருக்கத் தயங்கினால் அந்த அம்மாக்கள் எல்லாம் பிணங்கள்தானே! ஏனென்றால் பிணங்களின் அருகே நிற்பதற்கு எவரும் விரும்பமாட்டார்கள். கனிவோ! கண்டிப்போ! எது தந்தாலும் தாயின் முந்தானைப் பிடித்துக் கொண்டு நிற்கும் குழந்தைகளைப் பெற்று வளர்த்து வருபவர்களே நல்ல அம்மாக்கள் இவர்கள்தான் தங்கள் குழந்தைகளை நாட்டுக்கு நட்சசத்திரங்களாகத் தருவார்கள். நல்ல அம்மாக்களாய் வாழ்ந்து பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு வழிகாட்டும் எந்த பெண்ணும் இந்த மண்ணுக்கு குலதெய்வங்களே!
“மகன்களைக்
கொல்வதுதான்
மனுநீதிச் சோழனா!?”