08

Mar

2022

வெட்கித் தலைகுனிகிறேன்… -பெண்ணியம்

மார்ச் 8 வந்தவுடன் மகளிர் தினம் கொண்டாடும் மாமேதைகளே. மாதர்களை மனதில் சுமக்கும் மண்ணின் மைந்தர்களே. பெற்றோர்களை நினைவிலும், கணவனை இதயத்திலும், பிள்ளைகளை கருவிலும் சுமக்கின்ற இல்லத்தரசிகளை இதயத்தில் சுமக்கின்ற இனிய இதயங்களே! தாயில் பாதியும் கடவுளின் மீதியும் சமமாய்க் கொண்டு பூமிக்கு வந்த தேவதை சொர்க்கத்தை மண்ணிற்கு கொண்டு வந்த மகள் என்னும் மா உன்னதம் கண்ணிலும், கரத்திலும், முதுகிலும், முகத்தோடு முகமாக பூஜிக்கும் தகப்பன்களே! உங்கள் அனைவருக்கும் இந்தச் செய்தியைப் பகிர்வதில் இனம்புரியாத பயத்தில் வீழ்கிறேன்.

அமெரிக்கா போன்ற நாடுகள் அவசரமாக ஒரு செய்தியை தன் நாட்டு மக்களுக்குப் பகிர்ந்துள்ளது. அதாவது இந்தியாவிற்குப் பெண்கள் தனியாகச் செல்ல வேண்டாம் என்பதே. இது எவ்வளவு பெரிய செய்தி. இந்தியாவிற்கு இது ஒரு கேவலமான செய்தி. புண்ணிய நாடு, பெண்மையைப் போற்றுகின்ற நாடு, அமைதி நாடு, ஆன்மீக நாடு என்று பேர் வாங்கிய நாடு இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடாக மாறிவிட்டது. பெண்மையைப் பேணாத ஆண்மை முறுக்கினால் அத்து மீறுகின்ற நாடாக மாறிவிட்டது. இதனால் இன்று உலக அரங்கில் நாம் முகத்தில் உமிழப்படுகின்றோம். பேய்கள் ஆட்சிசெய்தால் பிணந்திண்ணும் சுடலைகள் நிரம்பி வழியும் என்று சொல்வது போல கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டிகளின் செயல்களைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளும், மக்களும் இருக்கும் வரை இந்த அத்துமீறல்கள் இருக்கத்தான் செய்யும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் உபி, மபி, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, பீகார், உத்திரகாண்ட, இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் சுற்றுலாத் தலங்கள் அதிகம் இங்குதான் இப்போது அயல்நாட்டுப் பயணிகள் வருவதற்கு அஞ்சுகிறார்கள். காரணம் என்ன? அரியனை ஏறுவதற்கும் ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சில அசிங்கங்களையும், அத்துமீறல்களையும் செய்ய ஆரம்பித்தார்கள். கயவர்களைக் கைக் கூலியாக்கினார்கள். காட்டுமிராண்டிகளிடம் கைகோர்த்து நின்றார்கள். பட்டாபிசேகம் செய்ய பச்சோந்திகளிடம் பாசம் வைத்தார்கள். இதனால் நாடு சுடுகாடானது நயவஞ்சகர்கள் நல்லவர்கள் போல் நாடாகமாடினார்கள். அஹிம்சை நாடு, வந்தவர்களை இம்சைப் படுத்தும் எச்சை நாடானது.

வலியவர்கள் எளியவர்களை வேட்டையாடத் துணிந்தார்கள். பார்வையில் கண்ட பாவைகளை எல்லாம் படுக்கையில் வீழ்த்தத்துடித்த பயங்கர வாதிகளுக்கும், பக்காப் பொறுக்கிகளுக்கும் பக்கவாத்தியம் வாசித்ததன் விளைவு இப்போது நாட்டின் வளர்ச்சி பக்கவாதம் வந்து படுத்தபடுக்கையாய் கிடக்கிறது. மேல் சாதி மக்களெல்லாம் சிலரைக் கீழ்சாதி மக்கள் என்று கேவலமாக நடந்து கொண்ட போதும் அவர்கள் கேட்க நாதியற்று அவர்களின் அழுகுரலும் அவயக் குரலும் இந்தச் செவிட்டுச் சமுதாயத்திற்கு கேட்காமலே போனது.

இதன் விளைவு அந்த ருசிகண்ட நாய்கள் தாங்கள் கடிப்பதை நிறுத்தவில்லை. தாழ்ந்த சாதிதானே எனத் தரங்கெட்டு நடந்தவர்கள் வெள்ளத் தோலுக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டுப் பெண்களைக் கடிக்க ஆரம்பித்ததனால் அத்தனை நாடுகளும் காரித்துப்புகிறது.

வெறிநாய்களும் சொறிநாய்களும் நிறைந்த தெருக்களில் தன் குழந்தைகளை அனுப்பத்தயங்கும் பெற்றோர்களைப் போல வெறிநாய்கள் மனித உருவில் நடமாடும் இந்தியத் தேசத்திற்குள் எந்தப் பெண்களையும் தனியாக அனுப்பத் தயங்குகிறார்கள். தடைசெய்கிறார்கள். அவர்கள் தம் மக்களைக் குழந்தைகளைப் பார்க்கிறார்கள். நாம் ஏன் அவர்கள் கண்ணுக்கு நாயாகத் தெரிகிறோம்? நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும்.!

உலக அரங்கில் நம் நாடு தானே! அவன் தாழ்ந்த சாதி அவனை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அவன் பிறமதத்துக்காரன். அவனை எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பிரிவினை வாதம் வந்தபிறகுதான் நாம் பேயாக மாறிவிட்டோம். சகிப்புத்தன்மைக்கு சமாதி கட்டிவிட்டு உணர்ச்சிகளுக்கு விளக்குப் பிடிக்கிறோம். நாம் வாழ அடுத்தவர்களை அழிக்கிறோம். நல்லவர்களை எடுபிடி நாய்களை ஏவிவிட்டு இருக்கிற இடம் தெரியாது அழிக்கிறோம். இதே நிலை நீடித்து நம் நாட்டை எல்லோரும் எச்சில் துப்பினால் இந்த நாட்டில் வாழ்வதைவிட நாண்டு கொண்டு சாகலாம். ஆகவே நலிந்து கிடக்கிற நாட்டை நாம் எப்படி தூக்கி நிறுத்துவது? உறவில் மெலிந்து கிடக்கிற நாட்டை எப்படி உரமூட்டுவது? காலம் கடந்து யோசித்தாலும் கண்ணியமாய் யோசிக்க வேண்டிய கட்டாயமிது! கடவுள் தேசம், சாத்தானின் வேட்டைக்காடானது. நல்லவர்களே ஒதுங்காதீர்கள்! நல்லவர்களை ஒதுக்காதீர்கள்! உங்களால்தான் இந்தியா உருப்படவேண்டும். உண்மையாய் இருங்கள். உண்மையை எடுத்துக் கூறுங்கள். உலகம் நமதாகட்டும் கலகம் நம்மைவிட்டு விலகட்டும்.

“சத்தியம் காக்காத தேசம் – தனக்குத்தானே
சாவு மணி அடித்துக்கொள்கிறது.”

ARCHIVES