07

Dec

2023

ஆவியோடு பேசுகிறேன்…

புத்தகம் வாசிப்பது என்று சொல்வார்கள். .என்னைப் பொறுத்தமட்டில் புத்தகம் வாசிப்பது அல்ல, புத்தகங்களோடு வசிப்பது. வாழுகின்ற நம்மோடு வசிப்பது சிலர். ஆனால், புத்தகங்கள் வாசிப்பது, புத்தகம் எழுதியவரோடு பேசுவது. அவர் உருவாக்கிய கதாப்பாத்திரங்களுடன் சுற்றி வருவது. அவர் காட்டிய இடங்களையெல்லாம் சுற்றி வருவது. அவர் சொன்னதை எல்லாம் செய்யத்துடிப்பது. அதில் இறந்தவர்களுக்காகச் சிறிது கண்ணீர் வடிப்பது. அவர் சொல்லிய தத்துவங்களை இந்தத் தலைமுறைக்கு அவர் சொன்னதாகச் சொல்வது.

புத்தகம் படிப்பது என்பது ஆவிகளோடு பேசுவது. ஏனென்றால் இந்தப் பூமிக்கு ஒவ்வொருவரும் வந்து செல்கிறார்கள், வாழ்ந்து செல்கிறார்கள். இதில் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவும், ஆவியும் விண்வெளியில் இருந்து பெறப்படுகிறது. உடல் மண் வழியாகக் கிடைக்கிறது என்று ஆன்மீகம் சொல்கிறது. இதில் ஒவ்வொரு உயிரும் பூமிக்கு வரும் போது கொண்டு வந்த உடம்பு மட்டும் பூமிக்குக் கொடுத்து விட்டுச் செல்கிறது. ஆனால் ஆவியும், அறிவும் இங்கேயே தங்கி விடுகிறது. “காண்போர் கண்டால் கல்லிலும், கடந்த காலத்தவர்களைப் பார்க்கலாம்”. காலம் கடந்தும் அவர்களோடு பேசலாம். அதுதான் அவர்களது ஆவியோடு பேசுவது.

சிலர் திரையில் (சினிமா) வாழ்கிறார்கள். சிலர் கலையில் வாழ்கிறார்கள். சிலர் எழுத்தில் வாழ்கிறார்கள். சிலர் எண்ணத்தில் வாழ்கிறார்கள். நிழலாகப், படமாகச், சிலையாக எழுத்தாக நம்மைச் சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். முகம் தெரியாது, முகவரி தெரியாது. ஆனால் அவர்கள் எழுத்துக்களை வாசிக்கும் போது நாம் அவர்களோடு பேசுகிறோம். அவர்கள் கதை சொன்னால் ஆவலோடு மனதிற்குள் பதிவு செய்கிறோம்.

இருவர் பேசினால் என்ன பேசுவோம். அவர்கள் கருத்துக்களை நம்மோடு பகிர்வார்கள். நமது கருத்துக்களை அவர்களோடு பகிர்வோம். புத்தகமும் அதுதானே! கருத்துக்களைப் பகிர்வது தானே! அவர்கள் பேசுவார்கள், இதயம் நனைந்து கொள்ளும், உருவமில்லாமல் உரையாடுவார்கள். உடனிருக்காமல் மனதை வருடுவார்கள். கட்டியணைக்காமல் மெய் சிலிர்க்க வைப்பார்கள். கை குலுக்காமல் உற்சாகம் தருவார்கள் ஏனென்றால் புத்தகம் பேசாது. புத்தகத்தில் பேசும்.

ஒரு முறை எனது அறையில் நான் அமர்ந்திருக்கும் போது ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். அப்போது ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது அவர் கூறினார். இப்படி ஒரு தனிமையும், அமைதியும் கிடைத்தால்தான் புத்தகம் படிக்க முடியும்’ என்றார். நான் கூறினேன் “நான் தனியாக இல்லையே!” என்று எனது அறையில் உள்ள அலமாரியைத் திறந்து காட்டினேன். அங்கு கம்பன், பாரதி, கண்ணதாசன், சேக்ஸ்பியர், ஷெல்லி, வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் என பலர் இருந்தார்கள். அவர்களிடம் சொன்னேன் இவர்கள் எப்போதும் என்னோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் ஆவி எப்போதும் என்னுடன் பேசிக் கொண்டு இருக்கிறது. நான் யாரோடு பேச வேண்டும் என நினைக்கிறேனோ! அவர்களோடு பேசுவேன். கண்கள் அவர்கள் கருத்துக்களைப் பார்க்கும், இதயம் அவர்களை வாசிக்கும், சுவாசிக்கும்.

விவியத்தை வாசிக்கும் போது இயேசு யாரிடமோ பேசியது என்னோடு பேசுவது போல் இருக்கும். கீதையில் கண்ணன் அர்ஜீனனுக்குச் சொன்னது எனக்குச் சொன்னது போல் இருக்கும். அல்லா முகமது நபியிடம் பேசும் போது நானும் அருகில் இருப்பது போல் உணர்வேன். புத்தர் சொன்னான், விவேகானந்தன் சொன்னான் என்று நான் சொன்னதெல்லாம் அவர் எழுதிய புத்தகத்தால் அவரோடு பேசியதைக், கேட்டதை, இப்போது பேசுகிறேன். நாம் எல்லோருமே இப்போது திருவள்ளுவரின் ஆவியோடு பேசிக் கொண்டுதானே இருக்கிறோம்.

புத்தகம் பேசுகிறது, புத்தகத்தோடு பேசுகிறோம். ஒவ்வொரு புத்தகத்திலும் அவரவர் ஆவி அமர்ந்திருக்கிறது. அது உலகம் முடியுமட்டும் அவற்றில் இருக்கும். இதைத்தான் இயேசு சொல்வார், ‘ நான் உலகம் முடியுமட்;டும் உன்னோடு இருப்பேன்’ என்பது இது தானே!. ஒரு பாடல் சொல்லும் ‘புத்தன் மறைந்து விட்டான், அவன் போதனை மறைந்துள்ளதா?’ S.P.பாலசுப்பிரமணியன், T.M.சௌந்திரராஜன், இருக்கிறார்களா? இல்லையா? பாட்டு இன்னும் கேட்கிறதே! சத்தம் இன்றும் நம்மைச் சந்தோசப்படுத்திக் கொண்டே தானே! இருக்கிறது. தாஜ்மகாலில் இன்றும் ஷாஜகானின் ஆவி உறங்கிக் கொண்டிருக்கிறதே! ஆவி என்பது பேய். அதனை விரட்ட வேண்டும் என்று நம்மை பயப்படுத்தி விட்டார்கள். ஆவி என்பது உயிர். அது ஓவியத்தில் இருக்கும், சிற்பத்தில் இருக்கும். ஆனால் புத்தகங்கள் வழியாகப் பேசும். வாசிப்பது என்பது மௌனமாகக் கேட்பது. கருத்துக்கள் வழியாக நம் மனதில் பதிவு செய்வது, ஆவியோடு அப்போது நாம் பேசுகின்றோம் எழுதியவர் நம் எதிரில் இருப்பார்.

ஒருவர் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் மௌனமாக ஆவியோடு பேசி;க் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இன்று காமராஜர், வ.உ.சி, பாரதி, காந்தி போன்றோரின் ஆவி கல்லறையில் அலையவில்லை. கல்வியில் புதைந்து கிடக்கிறது. கல்வியில் அவர்களைக் கற்கும் போது அவர்களோடு கை குலுக்குகிறோம். நூலகத்தில் அவர்களை வைக்கும் போது, அவர்களை அருகில் வைக்கிறோம். புத்தகத்தை நாம் வாங்கிச் செல்கிறோம் என்றால் அவர்களை நாம் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். எனது அறையில் பொருட்களைவிட புத்தகங்களே அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு ஆவியும் பேசும். ஆனால் ஒரே மாதிரிப் பேசாது. சில தன்னைப்பற்றிப் பேசும், சில கதைகள் சொல்லிப் பேசும், சில ஆன்மீகம் பேசும், சில வரலாறு பேசும், சில புராணக் கதைகள் பேசும், சில புதையுண்ட இரகசியம் பேசும், சில கடவுள்களைப் பேசும், சில கனவு காணுங்கள் எனப் பேசும், சில கனாக்களைப் பேசும், சில ஆவிகளைப் பேசும், சில பாவிகளைப் பேசும், சில வீரர்களைப் பேசும், சில தீரர்களைப் பேசும், சில சிரிக்க வைக்கும், சில சிந்திக்க வைக்கும், சில இரசிக்க வைக்கும், சில காதலிக்கும், சில கண்ணீர் சிந்தும் இப்படி எத்தனை, எத்தனையோ! ஆவிகள் எப்படி எப்படியெல்லாமோ! நம்மைச் சந்திக்கும்.

பள்ளிக்கூடம் சென்றால் கம்பன், வள்ளுவன், இளங்கோ என்ற கணக்கற்ற ஆவிகள் தமிழில் பேசும். சேக்ஸ்பியர், ஷெல்லி, வேட்ஸ்வொர்த் ஆவிகள் ஆங்கிலத்தில் பேசும், இராமானுஜம் போன்றவர்கள் கணிதத்தில் பேசுவார்கள். ஐன்ஸ்டின், எடிசன் போன்ற அறிவியல் மேதைகள் அறிவியலில் பேசுவார்கள். அசோகன், அலெக்ஸாண்டர், இராஜ ராஜ சோழன், ஷாஜகான் என வரலாற்று நாயகர்கள் வரலாற்றில் பேசுவார்கள். பேய் பிடித்தவர்களும், சாமி ஆடுபவர்களும் அடுத்தவர் உடலில் புகுந்து பேசுவது போல பாடப்புத்தகத்தில் அனைத்து ஆவிகளும் ஆசிரியர்களின் ஆவியில் வந்து பேசும். இறந்தவர்களின் ஆவி இருப்பவர்கள் மூலம் பேசுவதே கற்றல் செயல்பாடுகள் ஆகும்.

இறந்த பிறகும் பார்க்க வேண்டுமா? கண்தானம் செய்யுங்கள். இறந்த பிறகும் பேச வேண்டுமா? புத்தகம் எழுதுங்கள். அப்படியென்றால் படித்தவர்கள் மட்டும் தானே இதனைச் செய்ய முடியும்? இல்லை. பாமரர் பாடிய பாட்டுக்கள், சொல்லிய கதைகள், மீண்டும் பேசும் போது அவர்கள் ஆவி நம்மோடு பேசும். எத்தனை புத்தகங்கள் படித்திருப்பீர்கள், அத்தனையும் அவர்கள் ஆவியோடு நீங்கள் நடந்த சுகம். நீங்கள் பொன்னியின் செல்வன் படியுங்கள். சாண்டில்யன் ஆவி எத்தனையோ இறந்தவர்களோடு சுற்றி வர வைக்கும். அந்த சுகமே தனி! புத்தகம் படியுங்கள்! ஆவியோடு பேசுங்கள்!!

“எழுத்துக்களே மௌனத்தில்
இடம் மாறிக் கொள்வது
புத்தகம். . . . . .”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES